தமிழர்களின் சமஸ்டிக் கோரிக்கையை ஏற்கமாட்டேன் – மைத்திரிபால வாக்குறுதி
சிறிலங்கா அதிபர் தேர்தலில் தாம் வெற்றி பெற்றால், தமிழ்மக்களின் சமஸ்டிக் கோரிக்கையை ஏற்கமாட்டேன் என்று எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார் என்று ஏபி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
பல பத்தாண்டுகளாக சிறிலங்காவில் நீடித்து வரும் இனப்பிரச்சினைக்கு சமஸ்டி முறையிலான தீர்வு வழங்கப்பட வேண்டும் என்று தமிழ்த் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
ஆனால், தாம் ஆட்சிக்கு வந்தால் தமிழ்த் தலைவர்களின் இந்தக் கோரிக்கையை நிராகரிப்பேன் என்று, சிங்கள பௌத்த தேசியவாத கட்சியான ஜாதிக ஹெல உறுமயவுக்கு வாக்குறுதி அளித்துள்ளார் மைத்திரிபால சிறிசேன.
இன்று ஜாதிக ஹெல உறுமயவுடன் எட்டப்பட்டுள்ள இணக்கப்பாட்டின் படி, பௌத்த மதத்துக்கு அரசியலமைப்பில் முக்கியத்துவம் அளிப்பதாகவும் மைத்திரிபால சிறிசேன உறுதி வழங்கியுள்ளார்.
சுதந்திரமான தனிநாடு ஒன்றை உருவாக்கும் நோக்கில் தமிழர்களால் நடத்தப்பட்ட போராட்டம், சிறிலங்கா இராணுவத்தினால் 2009ம் ஆண்டு தோற்கடிக்கப்பட்ட பின்னர், தாம் பிரிவினைக் கோரிக்கையை கைவிட்டு விட்டதாக தமிழ்த் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும், தமிழர்கள் அதிகம் வாழும், வடக்கு,கிழக்கில் சமஸ்டி முறையில் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர் என்றும் ஏபி தெரிவித்துள்ளது.