சிறிலங்கா – இந்திய உறவு குறித்து மகிந்தவிடம் திருப்தி வெளியிட்டார் டோவல்
சிறிலங்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவின் தரம் குறித்து இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் திருப்தி வெளியிட்டுள்ளதாக, சிறிலங்கா அதிபர் செயலகம் தெரிவித்துள்ளது.
இன்று காலை சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவை, இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் அதிபர் மாளிகையில் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
இதன்போதே, இந்தியாவுடன் சிறிலங்கா கொண்டுள்ள உறவின் தன்மை குறித்து அஜித் டோவல் திருப்தி வெளியிட்டுள்ளார்.
இருதரப்பு உறவுகளை மேலும் பலப்படுத்தும் வழிமுறைகள் குறித்தும் இந்தச் சந்திப்பின் போது, கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும் சிறிலங்கா அதிபர் செயலகம் தெரிவித்துள்ளது.
இந்தச் சந்திப்பில் அஜித் டோவலுடன் இந்தியத் தூதுவர் வை.கே.சின்கா மற்றும் மூத்த அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
சிறிலங்கா அதிபருடன், வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், சிறிலங்கா அதிபரின் செயலர் லலித் வீரதுங்க, வெளிவிவகாரச் செயலர் சேனுகா செனிவிரத்ன ஆகியோரும் இந்தச் சந்திப்பில் பங்கேற்றனர்.