ஒப்புக்கொண்டது அவுஸ்ரேலியா
அவுஸ்ரேலியா நோக்கி 37 அகதிகளுடன் வந்த படகு ஒன்றை சிறிலங்கா அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளதை அவுஸ்ரேலிய குடிவரவு அமைச்சர் ஸ்கொட் மொறிசன் ஒப்புக்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், கொகோஸ் தீவுக்கு அருகே கடந்த 15ம் நாள் அவுஸ்ரேலிய எல்லைக்காவல் படையினரால் மறிக்கப்பட்ட படகில் வந்த 38 பேரில் ஒருவர் மட்டும், அவுஸ்ரேலியாவின் கடல் கடந்த தடுப்பு நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளார்.
ஏனைய 37 இலங்கையர்களும் புதன்கிழமை மாலை காலிக்கு கிழக்கு- தென்கிழக்கேயுள்ள நடுக்கடலில் வைத்து அவுஸ்ரேலிய எல்லைக்காவல்படை அதிகாரிகளால் சிறிலங்கா அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
படகில் வந்த அனைவரும், அவுஸ்ரேலிய குடிவரவு அதிகாரிகளால், கடலில் வைத்து, சிங்கள, தமிழ் மொழிபெயர்ப்பாளர்களின் உதவியுடன் விசாரணை செய்யப்பட்டனர்.
அவர்களில் ஒருவர் மட்டும், அகதி அந்தஸ்து தொடர்பான நடைமுறைகளுக்கு ஏற்றவரென பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
இவர் அவுஸ்ரேலிய அரசின் கொள்கையின்படி, பபுவா நியூகினியா அல்லது நௌரு தடுப்பு நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்படுவார்“ என்றும் அவர் கூறியுள்ளார்.