பாகிஸ்தானில் சிறிலங்கா விமானப்படைத் தளபதி முக்கிய ஆய்வு
சிறிலங்கா விமானப்படைத் தளபதி எயர் மார்சல் கோலித குணதிலக மூன்று நாள் பயணமாக பாகிஸ்தான் சென்றுள்ளார். அவருக்கு இன்று பாகிஸ்தான் விமானப்படைத் தலைமையகத்தில் மரபுரீதியான அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.
அதையடுத்து, பாகிஸ்தான் விமானப்படைத் தளபதி எயர் சீவ் மார்சல் தாஹிர் ரபிக் பட்டை, சிறிலங்கா விமானப்படைத் தளபதி சந்தித்து பேச்சுக்களை நடத்தினார்.
அத்துடன், பாகிஸ்தான் அதிபரையும் சந்தித்து அவர் பேச்சு நடத்தினார்.
அதையடுத்து பாகிஸ்தானின் பல்வேறு விமானப்படைத்தளங்களுக்கு அவர் பயணம் மேற்கொண்டுள்ளார்.
பாகிஸ்தான் வான் பொறியியல் தொகுதி அமைந்துள்ள கம்ராவில், சிறிலங்கா விமானப்படைத் தளபதி, முக்கியமான ஆய்வில் ஈடுபட்டுள்ளார்.
விமான மீள்கட்டமைப்பு மற்றும் விமான உற்பத்தி தொழிற்சாலைக்கு சென்ற சிறிலங்கா விமானப்படைக் குழுவினர், அங்கு ஜேஎவ்-17, சுப்பர் முஸ்ஸக் விமானங்கள் இறுதியாக ஒருங்கிணைக்கப்பட்டு விமான பரிசோதனைகளை மேற்கொள்ளப்படும் வசதிகளையும் பார்வையிட்டுள்ளனர்.
சிறிலங்காவில் விமான பராமரிப்பு நிலையம் ஒன்றை அமைக்க சீனாவுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
சீனாவுடன் இணைந்து பாகிஸ்தான் அமைத்துள்ள இத்தகைய வசதிகளின் செயற்பாடுகளை பார்வையிடுவதற்காவே, சிறிலங்கா விமானப்படைத் தளபதி பாகிஸ்தான் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.