மருந்து நிறுவனங்களிடம் 100 கோடி ரூபா சுருட்டிய ‘நபர்’ – அம்பலப்படுத்துகிறார் மைத்திரிபால
தேசிய மருந்துக் கொள்கையை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றாமல் தடுப்பதற்காக சிறிலங்கா அரசாங்கத்தில் உள்ள ஒருவர், 100 கோடி ரூபாவை மருந்து நிறுவனங்களிடம் லஞ்சமாகப் பெற்றுள்ளதாக, முன்னாள் சுகாதார அமைச்சரும், எதிரணியின் பொது வேட்பாளருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
மருத்துவத்துறை பணியாளர் தொழிற்சங்க கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இந்த அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார்.
தேசிய மருந்துக் கொள்கை தொடர்பான சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றாமல் தடுப்பதற்கு குறிப்பட்ட ஒரு நபர், தலா 2.5 மில்லியன் ரூபா படி, 400 மருந்து விநியோக நிறுவனங்களிடம் பணம் பெற்றுள்ளார்.
தேசிய மருந்துக் கொள்கை தொடர்பான சட்ட வரைவு தயாரிக்கப்பட்ட பின்னர், சட்டவரைவுத் திணைக்களத்தில் இருந்து பலமுறை காணமற்போனது.
இந்த மோசடி தொடர்பாக அண்மையில் சுகாதார அமைச்சுக்கு வந்த அரசாங்க அதிகாரி ஒருவர் மூலம் அறிந்து கொண்டேன்.
வெண்சுருட்டுப் பொதிகளில், புற்றுநோய் அபாய எச்சரிக்கைப் படங்களை 80 வீதம் பிரசுரிக்க வேண்டும் என்ற சுகாதார அமைச்சின் தீர்மானத்தையும் என்னால் நடைமுறைப்படுத்த முடியவில்லை.
அமைச்சர்களால் இன்று சுதந்திரமான முறையில் தமது பணிகளை மேற்கொள்ள முடியவில்லை” என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
எனினும், மருந்து விநியோக நிறுவனங்களிடம் தலா 2.5 மில்லியன் ரூபா பணத்தைப் பெற்றுக் கொண்ட அந்த குறிப்பிட்ட நபர் யார் என்ற விபரத்தை மைத்திரிபால சிறிசேன வெளியிடவில்லை.