தீவிரவாதமே நாட்டுக்கு அடிப்படைச் சவால் – சார்க் மாநாட்டில் மகிந்த
தீவிரவாதம் இன்னமும் தமது நாட்டுக்கும் பிராந்தியத்துக்கும் அச்சுறுத்தலாக இருப்பதாக, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
சார்க் மாநாட்டில் உரையாற்றிய போது சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நேபாளத் தலைநகர் காத்மண்டுவில் இன்று காலை 18வது சார்க் நாடுகளின் தலைவர்களின் உச்சி மாநாடு ஆரம்பமானது.
இந்த மாநாட்டில், இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஸ், நேபாளம், பூட்டான், மாலைதீவு, ஆப்கானிஸ்தான், சிறிலங்கா ஆகிய எட்டு நாடுகளின் தலைவர்களும் பங்கேற்றுள்ளனர்.
இந்த மாநாட்டில் உரையாற்றிய சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச,
“தீவிரவாதம் சிறிலங்காவின் உறுதிப்பாட்டுக்கு அடிப்படையான சவாலாக இருந்து வருகிறது.
தீவிரவாத சவால்களை எதிர்கொள்வதற்கு சார்க் நாடுகள் ஒருங்கிணைந்து செயற்பட வேண்டும்” என்று கூறியுள்ளார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும், தீவிரவாதம் குறித்த கடுமையான கருத்துக்களை இந்த மாநாட்டில் முன்வைத்துள்ளார்.
2008ம் ஆண்டு இதே நாளில், மும்பையில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலை நினைவு கூர்ந்து அவர் உரையாற்றினார்.
ஆப்கான் அதிபருடன் சந்திப்பு
சார்க் மாநாட்டில் பங்கேற்கச் சென்றுள்ள சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச நேற்று ஆப்கானிஸ்தான் அதிபரைச் சந்தித்து இருதரப்பு பேச்சுக்களை நடத்தியுள்ளார்.
காத்மண்டுவில் உள்ள விடுதியொன்றில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.
ஆப்கானிஸ்தான் அதிபர் அஸ்ரப் கயானியும், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவும் தமது தரப்பு அதிகாரிகளுடன் இந்தச் சந்திப்பில் பங்கேற்றனர்.