விசாரணைக்கு சிறிலங்கா ஒத்துழைக்க வேண்டும் – ஐ.நா மனித உரிமை ஆணையாளர் கோரிக்கை
சிறிலங்கா மீதான விசாரணைகளுக்கு ஆக்கபூர்வமான முறையில் சிறிலங்கா அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் அல் ஹுசேன் கோரிக்கை விடுத்துள்ளார்.
சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு அனுப்பிய கடிதம் ஒன்றுக்கு பதிலளித்து அனுப்பியுள்ள கடிதத்திலேயே அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.
விசாரணையின் முக்கியமான பிரச்சினைகள் விடயத்தில் சிறிலங்கா அரசாங்கம் ஐ.நா மனித உரிமை ஆணயாளர் பணியகத்துடன் இணைந்து செயற்பட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
விசாரணைக்காக சாட்சியங்களை சமர்ப்பிக்கும் காலஎல்லை முடிந்து விட்டது என்றும், அதற்கான மின்னஞ்சல் முகரிகள் மூடப்பட்டு விட்டதாகவும். ஐ.நா மனித உரிமை ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையினால் ஆணையிடப்பட்டதற்கமைய, நடுநிலையுடனும், நேர்மையுடனும், சுதந்திரமாகவும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, ஐ.நா விசாரணைகள் நிபுணத்துவத் திறனின்றி மேற்கொள்ளப்படுவதாகவும் பின்கதவால் சாட்சியங்கள் பெறப்படுவதாகவும் சிறிலங்கா அரசாங்கம் குற்றம்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.