மேலும்

புதிய ஆட்சியில் எஞ்சியிருக்கும் புலிகளையும் அழிப்போம் – சூளுரைக்கிறது ஐதேக

sajith-premadasaசிறிலங்காவில் எதிரணி அமைக்கவுள்ள புதிய ஆட்சியில், அனைத்துலக அளவில் எஞ்சியிருக்கும் விடுதலைப் புலிகள் முற்றாக ஒழிக்கப்படுவார்கள் என்றும், புலிகளின் கனவு நிறைவேற ஒருபோதும் விடமாட்டோம் என்றும் நாடாளுமன்றத்தில் சூளுரைத்துள்ளார் ஐதேகவின்  பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ.

நேற்று இடம்பெற்ற வரவுசெலவுத்திட்டம் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய அவர்,

”வரப் போகும் அதிபர் தேர்தலில் எதிரணியின் வெற்றி நிச்சயம்.

வெற்றி பெற்ற பின்னர் நாட்டையோ அரசாங்கத்தை  நிர்வகித்த தலைவர்களையோ அல்லது படையினரையோ ஒரு போதும் காட்டிக் கொடுக்கமாட்டோம்.

எதிரணி வெற்றி பெற்றவுடன் மீண்டும் சதி செய்து தனிநாட்டை உருவாக்கிக் கொள்ள முடியுமென்ற அனைத்துலகப் புலிகள் கனவு காண்பார்களாயின் அது ஒரு போதும் நிறைவேறாது.

அதுமட்டுமல்ல எதிரணி ஆட்சியில் அனைத்துலக ரீதியில் எஞ்சியுள்ள விடுதலைப் புலிகளை ஒழிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

அதிபர் தேர்தலில் எதிரணி வெற்றி பெற்றால், அரச தலைவர்கள் மற்றும் படையினர் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றங்களுக்கு கொண்டு செல்லப்படுவார்கள் என்று பரப்புரை செய்யப்படுகிறது.

நடக்கப்போவது, தேசிய தேர்தலொன்றே தவிர அனைத்துலக தேர்தல் அல்ல. அதற்கும் அனைத்துலக நீதிமன்றத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை.

நாட்டை விற்கும் கூட்டம் நாங்கள் அல்ல.

எதிர்க்கட்சியினர் வெற்றி பெற்றால், அரச தலைவர்களையும் படையினரையும் அனைத்துலக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வோம் என்ற கனவை அனைத்துலகப் புலிகள் காணலாம்.

நாம் ஒரு போதும் நாட்டை காட்டிக் கொடுக்கமாட்டோம். அரச மற்றும் தேசிய தலைவர்களை காட்டிக் கொடுக்கமாட்டோம்.

எதிரணியின் பிரதான கட்சியான ஐதேகவின் பிரதித் தலைவர் என்ற ரீதியில் இதை நான் உறுதிபட  தெரிவித்து கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *