சிறிலங்காவில் 73 ஆயிரம் அடிமைகள் – அனைத்துலக ஆய்வு கூறுகிறது
சிறிலங்காவில் சுமார் 73,600 பேர் தமது உரிமைகளை இழந்த நிலையில் அடிமைகளாக இருப்பதாக அனைத்துலக ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2014ம் ஆண்டுக்கான பூகோள அடிமைகள் சுட்டியை, Walk Free Foundation வெளியிட்டுள்ளது.
167 நாடுகளை உள்ளடக்கியதாக தயாரிக்கப்பட்டுள்ள இந்தப் பட்டியலில், சிறிலங்கா 92வது இடத்தில் நிலைப்படுத்தப்பட்டுள்ளது.
நாட்டின் சனத்தொகைக்கும், அடிமைகளின் எண்ணிக்கைக்கும் இடையிலான ஒப்பீட்டின் அடிப்படையில் இந்த தரப்படுத்தல் அமைந்துள்ளது.
சிறிலங்காவின் ஒட்டுமொத்த சனத்தொகையில், 0.359 வீதமானோர் அடிமைகளாக இருப்பதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் உள்ள 27 நாடுகளில் சிறிலங்கா 14வது இடத்தில் உள்ளது.
ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் இந்தியா முதலிடத்திலும், அதையடுத்து பாகிஸ்தான் கம்போடியா, மொங்கோலிய அகிய நாடுகளும் அடிமைகள் பட்டியலில் இருக்கின்றன.
உலகில் மூன்றில் இரண்டு பங்கு அடிமைகள் ஆசிய பசுபிக் நாடுகளிலேயே உள்ளனர்.
மத்திய கிழக்கு நாடுகளில் சிறிலங்கா, நேபாளம், பங்களாதேஸ் நாட்டு ஆண்கள் கட்டுமானத்துறையில் அடிமைகளாக நடத்தப்படுவதாகவும், இந்த நாடுகள் மற்றும் இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளின் பெண்கள் பாலியல் அடிமைகளாக நடத்தப்படுவதாகவும் இந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.