கொழும்புத் துறைமுகத்தில் ரஸ்ய நாசகாரிப் போர்க்கப்பல்
ரஸ்யக் கடற்படையின் ‘யரொஸ்லாவ் முட்ரி’ என்ற நாசகாரி போர்க்கப்பல் நான்கு நாள் நல்லெண்ணப் பயணமாக நேற்று, கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
கப்டன் விளாடிமிர் செரோகோவ் தலைமையிலான 210 ரஸ்யக் கடற்படையினர் பணியாற்றும் இந்த நாசகாரிப் போர்க்கப்பல், 126.6 மீற்றர் நீளத்தைக் கொண்டதாகும்.
கொழும்புத் துறைமுகத்தில் ரஸ்யக் கடற்படைக் கப்பலுக்கு சிறிலங்கா கடற்படையினர் வரவேற்பு அளித்தனர்.
மேற்கு கடற்படைத் தலைமையகத்துக்கு சென்ற ரஸ்யப் போர்க்கப்பலின் கட்டளை அதிகாரி, அங்கு சிறிலங்கா கடற்படையின் மேற்குப் பிராந்திய தலைமை அதிகாரி றியர் அட்மிரல் தயானந்த நாணயக்காரவுடன் பேச்சுக்களை நடத்தினர்.
ரஸ்யப் போர்க்கப்பல் வரும் 28ம் நாள் வரை கொழும்புத் துறைமுகத்தில் தரித்து நிற்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.