இந்திய – சிறிலங்கா சிறப்புப் படைகளின் மூன்று வார கூட்டுப் பயிற்சி நிறைவு
இந்திய – சிறிலங்கா சிறப்புப் படைப்பிரிவுகள் இணைந்து நடத்திய மூன்று வாரகால கூட்டுப் போர்ப்பயிற்சி நேற்று அம்பாந்தோட்டையில் நிறைவடைந்தது.
மித்ர சக்தி என்ற பெயரில், குடாஓயாவில் உள்ள கொமாண்டோ பயிற்சிப் பாடசாலையில், இந்தப் போர்ப்பயிற்சி இம்மாத ஆரம்பத்தில் துவங்கியிருந்தது.
நேற்று அம்பாந்தோட்டை, மாகம்புர அனைத்துலக மாநாட்டு நிலையத்தில் இந்த பயிற்சியின் இறுதி நாள் நிகழ்வு இடம்பெற்றது.
பயிற்சியை முடித்துக் கொண்ட படையினருக்கு, சிறிலங்காப் படைகளின் மத்திய படைகளின் தலைமையக கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் மனோ பெரேரா சான்றிதழ்களை வழங்கினார்.
இந்தக் கூட்டுப் பயிற்சியில், இந்திய இராணுவத்தின் இராணுவ நடவடிக்கைகளுக்கான பிரதி பணிப்பாளர் பிரிகேடியர் ஜெனரல் சுதாகர் தலைமையில், இந்திய இராணுவத்தின் சிறப்புப் படைப் பிரிவைச் சேர்ந்த 5 அதிகாரிகளும் 37 படையினரும் பங்குபற்றியிருந்தனர்.
சிறிலங்கா இராணுவத்தின் கொமாண்டோ மற்றும் சிறப்புப் படைப்பிரிவுகளின் 168 படையினரும், கடற்படை மற்றும் விமானப்படையின் தலா 16 பேர் கொண்ட அணிகளும் சிறிலங்கா இராணுவத் தரப்பில் இந்தப் போர்ப் பயிற்சியில் பங்கெடுத்தன.
கடந்தமாதம் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்ட, இந்திய பாதுகாப்பு அமைச்சின் செயலர் ஆர்.கே. மாத்தூர் தலைமையிலான அதிகாரிகளுக்கும், சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவுக்கும் இடையில் நடத்தப்பட்ட பேச்சுக்களை அடுத்தே, இந்தப் போர்ப்பயிற்சி இடம்பெற்றது.