எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன?
சிறிலங்காவில் வரும் ஜனவரி மாதம் நடக்கவுள்ள அதிபர் தேர்தலில், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக, எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலரும் அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன நிறுத்தப்படலாம் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்குள் ராஜபக்ச குடும்பத்தின் ஆதிக்கம் அதிகரித்துள்ளதால் வெறுப்படைந்துள்ள, மைத்திரிபால சிறிசேனா உள்ளிட்ட சுமார் 20 வரையான முக்கிய அமைச்சர்கள், பிரமுகர்கள், எதிர்க்கட்சிக்கு ஆதரவளிக்கத் தயாராகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பெரும்பாலும் இன்று மைத்திரிபால சிறிசேன தலைமையில் இவர்கள் எதிரணியுடன் இணையலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்கவே, மைத்திரிபால சிறிசேனவை மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக போட்டியில் நிறுத்துவதற்குத் திட்டம் வகுத்துச் செயற்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனால், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் வாக்குகள் பிரிந்து, மகிந்த ராஜபக்சவுக்கு கடும் நெருக்கடி உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேவேளை. மைத்திரிபால சிறிசேன எதிரணியுடன் இணைந்து கொள்ளவுள்ளதாக நேற்று தகவல்கள வெளியான நிலையில், சிறிலங்கா அரசாங்கம் அதனை நிராகரித்துள்ளது.
இதுகுறித்து கருத்து வெளியிட்ட அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல, மைத்திரிபால சிறிசேனா மீது அரசாங்கம் நம்பிக்கை வைத்திருப்பதாக தெரிவித்திருந்தார்.
முன்னதாக, நேற்று முன்தினம் நடந்த சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில், மைத்திரிபால சிறிசேனவுக்கு பிரதமர் பதவியை வழங்க சிறிலங்கா அதிபர் முன்வந்ததாகவும், அதனை ஏற்க அவர் மறுத்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.
எனினும், அந்தக் கூட்டத்தில் மகிந்த ராஜபக்சவின் தேர்தல் பரப்புரைக்கான ஒருங்கிணைப்பாளராக மைத்திரிபால சிறிசேனவே நியமிக்கப்பட்டிருந்தார்.
அதுபோலவே கட்சி தாவுவதைத் தடுப்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த சேனநாயக்கவுக்கு தொகுதி அமைப்பாளர் பதவி வழங்கப்பட்ட போதும், நேற்று மாலை அவர் எதிரணியுடன் இணைந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.