சொல்ஹெய்மின் மிரட்டலுக்கு அஞ்சவில்லையாம் சிறிலங்கா
நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் ஒரு பொய்யர் என்றும், தீவிரவாதிகளின் ஆதரவாளர் என்றும் சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல,
“விடுதலைப் புலிகளுடன் இணைந்து செயற்பட்ட எரிக் சொல்ஹெய்ம் ஒரு பொய்யர். தீவிரவாதிகளின் ஆதரவாளர்.
பிரிவினைவாத தீவிரவாதிகள் விடயத்தில் மென்போக்கை கடைப்பிடித்த அவர் எப்போது சிறிலங்கா அரசாங்கத்துக்கும், ஆயுதப்படைகளுக்கும் எதிராகவே செயற்பட்டு வந்தவர்.
கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக, விடுதலைப் புலிகளுக்கு உயர்வலுத் தொடர்புசாதனங்களை கொண்டு செல்வதற்கும், விடுதலைப் புலிகள் குரும்பட்டி என்ற மேம்படுத்தப்பட்ட பறக்கும் இயந்திரத்தை பாகங்களாகக் கொண்டு சென்று ஒன்று சேர்ப்பதற்கும் ஏற்பாடு செய்து கொடுத்திருந்தார்.
சமாதான பேச்சுக்கான நடுவராக நடித்து சிறிலங்காவுக்கும், சிறிலங்கா மக்களுக்கும் அவர் நிறைய தீமைகளைச் செய்தார்.
சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச பொய் கூறுவதாக அவர் கூறியுள்ளது தான் பொய். அவர் தான் ஒரு பொய்யர்.
போர்க்குற்றங்கள் குறித்து தாம் ஐ.நா விசாரணைக் குழுவின் முன்பாக சாட்சியமளிக்கப் போவதாக எரிக் சொல்ஹெய்ம் தனது அறிக்கையில் கூறியுள்ளது குறித்து சிறிலங்கா அரசாங்கம் கவலை கொள்ளவில்லை.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.