விடுவிக்கப்பட்ட தமிழ்நாட்டு மீனவர்கள் புதுடெல்லி சென்றனர்- மோடியைச் சந்திக்க ஏற்பாடு
சிறிலங்கா அதிபரின் பொதுமன்னிப்பை அடுத்து நேற்று விடுதலை செய்யப்பட்ட தமிழ்நாட்டு மீனவர்கள் ஐவரையும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சந்திக்கவுள்ளார்.
நேற்று விடுதலையான மீனவர்கள் ஐவரும் இன்று பிற்பகல் 2 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சிறிலங்கன் எயர்லைன்ஸ் விமானம் மூலம் புதுடெல்லிக்குப் பயணமாகினர்.
இவர்கள் பயணம் செய்த விமானம் தற்போது புதுடெல்லியில் தரையிறங்கியுள்ளது.
மீனவர்கள் ஐவரையும், இன்றிரவு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியையும், வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜையும் சந்திக்கவுள்ளனர்.
அதன் பின்னரே நாளை சொந்த இடங்களுக்குத் திரும்பவுள்ளனர்.
அதேவேளை, இன்று திருச்சி வழியாக மீனவர்கள் திரும்பவுள்ளதாக தகவல்கள் வெளியானதால், திருச்சி விமான நிலையத்தில் உறவினர்கள் காத்திருந்து ஏமாற்றமடைந்தனர்.