சிறிலங்காவின் நிபந்தனைக்கு இணங்கியது இந்தியா
ஐந்து தமிழ்நாட்டு மீனவர்களுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் விதித்திருந்த மரணதண்டனைக்கு எதிராக, சமர்ப்பித்திருந்த மேல்முறையீட்டு மனுவை கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகம் விலக்கிக் கொண்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுபற்றி இந்திய அரசாங்கத் தரப்பில் அதிகாரபூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
சிறிலங்கா அதிபரின் பொதுமன்னிப்பு அல்லது தண்டனைக்குறைப்பு அறிவிப்புக்கு வசதியாகவே, மேல்முறையீட்டு மனு விலக்கிக் கொள்ளப்பட்டதாகத் தெரியவருகிறது.
கொழும்பு மேல் நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, கடந்த 11ம் நாள் இந்தியத் தூதரகத்தின் ஏற்பாட்டில் இந்த மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
எனினும், மேல்முறையீடு செய்யாவிட்டால், தாம் மீனவர்களுக்குப் பொதுமன்னிப்பு அளிக்கத் தயார் என்று பிரதி அமைச்சர் பிரபா கணேசன் மூலம், இந்தியாவுக்கு நிபந்தனை விதித்திருந்தார் சிறிலங்கா அதிபர்.
இந்தநிலையில், கடந்த வாரமும், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுடன் தொலைபேசி மூலம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இந்த விவகாரம் குறித்துப் பேசியிருந்தார்.
இதையடுத்தே, மீனவர்களின் சார்பில் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளன.
மரணதண்டனை விதிக்கப்பட்ட மீனவர்கள் அப்பாவிகள் என்றும், அவர்களுக்கு தண்டனைக்குறைப்பு அல்லாமல், முழுமையான பொது மன்னிப்பு அளிக்க வேண்டும் என்றே இந்தியா வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
எனினும், சிறிலங்கா அதிபரின் முடிவு என்னவென்று இன்னமும் தெரியவரவில்லை.