மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக கொழும்பில் பாரிய பேரணி
சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச மூன்றாவது தடவையும் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கு எதிராக கொழும்பில் நேற்று பாரிய பேரணி ஒன்று நடத்தப்பட்டது.
ஜேவிபி தலைமையிலான ஜனநாயகத்துக்கான மக்கள் அமைப்பு இந்தப் பேரணிக்கு எற்பாடு செய்திருந்தது.
“மகிந்தவுக்கு மூன்றாவது தடவை முடியாது – சட்டவிரோத அதிபர் தேர்தல் வேண்டாம்” என்ற தொனிப்பொருளில் நடத்தப்பட்ட இந்தப் பேரணியில், கடுமையான மழைக்கும் மத்தியில், ஆயிரக்கணக்கானோர் பங்குபற்றினர்.
பேரணியில் பங்கேற்றவர்கள், ஜனநாயகத்தை மீள நிலைநாட்டுமாறு வலியுறுத்தியும், சர்வாதிகாரத்தை தோற்கடிப்போம் என்றும் முழக்கங்களை எழுப்பியதுடன் சுலோக அட்டைகளையும் தாங்கியிருந்தனர்.
கொழும்பு பிரின்ஸ் பார்க் பகுதியில் இருந்து குணசிங்கபுர வரை இந்தப் பேரணி இடம்பெற்றது.
இந்தப் பேரணியில் ஜேவிபி தலைவர் அனுரகுமார திசநாயக்க, நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் மற்றும் ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர் உள்ளிட்டோரும் பங்குபற்றினர்.