அதிபர் தேர்தலுக்கான அறிவிப்பு இன்று வெளியாகும்
சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச இன்று அடுத்த அதிபர் தேர்தலுக்கான முறைப்படியான அறிவிப்பை வெளியிடுவார் என்று கொழும்பு அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்க்கப்படுகிறது.
அரசியலமைப்புச் சட்டத்தின் படி, சிறிலங்கா அதிபர் ஒருவர் பதவியேற்று நான்கு ஆண்டுகள் கழித்து, எந்த நேரத்திலும் அடுத்த அதிபர் தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட முடியும்.
சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தனது இரண்டாவது பதவிக்காலத்தை நிறைவு செய்ய இன்னும் இரண்டு ஆண்டுகள் இருந்தாலும், அவர் முன்கூட்டியே தேர்தலை நடத்த திட்டமிட்டுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று அதிபர் தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிடும் சிறிலங்கா அதிபர், அதுதொடர்பான வர்த்தமானி அறிவிப்பையும் வெளியிட்டு, தேர்தலுக்கான நடவடிக்கைகளை ஆரம்பித்து வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வரும் ஜனவரி மாதம் முதல் வாரத்தில், அதிபர் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளில் சிறிலங்காவின் தேர்தல் திணைக்களம் ஈடுபட்டுள்ளது.
இதனால், தேர்தல் திணைக்கள அதிகாரிகளின் விடுமுறைகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.