அரசாங்கத்தில் நீடிக்குமா ஜாதிக ஹெல உறுமய? – முடிவு இன்று அறிவிப்பு
சிறிலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான கூட்டணியில் தொடர்வதா – வெளியேறுவதா என்பதை முடிவு செய்வதற்காக ஜாதிக ஹெல உறுமயவின் மத்திய குழு இன்று கூடவுள்ளது.
இந்தக் கூட்டத்துக்கு ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் வண.ஓமல்பே சோபித தேரர் தலைமை தாங்குவார்.
அதேவேளை, வரும் அதிபர் தேர்தலுக்கு முன்னதாக, நிறைவேற்று அதிகார ஆட்சிமுறையை ஒழிக்க வேண்டும் என்று தாம் முன்வைத்த யோசனை குறித்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிடம் இருந்து எந்தப் பதிலும் வரவில்லை என்று ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.
தமது நிபந்தனைகளுக்கு இணங்காவிடின், அரசாங்கத்தை விட்டு வெளியேறுவது என்ற தாம் ஏற்கனவே எடுத்த முடிவில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவை அறிவிப்பதற்கு முன்னர், செயற்குழுவில் கலந்துரையாடப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, நேற்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலரும் அமைச்சருமான சுசில் பிறேம் ஜெயந்த, ஹெல உறுமயவின் யோசனைக்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சி பதிலளித்துள்ளதாகவும், அவர்களின் பதிலை எதிர்பார்த்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.