மேலும்

வடக்கு மாகாணசபைக்குள் முரண்பாட்டை ஏற்படுத்தும் இந்தியாவின் வாகனங்கள்

northern-provincial-councilவடக்கு மாகாணசபை உறுப்பினர்களின் பாவனைக்கு எட்டு வாகனங்களை வழங்க இந்தியா முன்வந்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

வடக்கு மாகாணசபை தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்கள் பதவியேற்றுக் கொண்ட போது, சபையின் 38 உறுப்பினர்களுக்கும் வரி விலக்களிக்கப்பட்ட வாகனங்களை இறக்குமதி செய்து வழங்குவதாக இந்தியத் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது.

எனினும் இந்த வாகனங்களுக்கு சிறிலங்கா நிதியமைச்சு வரிவிலக்கு வழங்க மறுத்து விட்டது.

இந்தியா வழங்கும் வாகனங்களுக்கு வரி விலக்களிக்கப்பட்டால்,  ஏனைய எட்டு மாகாணசபை உறுப்பினர்களுக்கும் அந்தச் சலுகையை வழங்க வேண்டியிருக்கும், எனவே அதனை செய்ய முடியாது என்று சிறிலங்கா நிதியமைச்சு கூறியுள்ளது.

இதையடுத்து, எட்டு SUV (Sport Utility Vehicles) வாகனங்களை வழங்குவதற்கு இந்தியா முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது.

தமது பகுதியில் கூடுதல் சமூகப் பணியாற்றுபவர்களுக்கு இந்த வாகனங்களை வழங்குமாறு இந்தியத் தரப்பில் கூறப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த விவகாரத்தினால், மாகாணசபை உறுப்பினர்களிடையே குழப்ப நிலையை உருவாகும் என்றும்,  வாகனங்களை வழங்குவதாயின் எல்லா உறுப்பினர்களுக்கும் வழங்க வேண்டும் என்றும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன.

எட்டு வாகனங்கள் மட்டுமே வழங்கப்படுமானால், அவற்றை உறுப்பினர்கள் எவரும் பெற்றுக்கொள்ளக் கூடாது என்று வலியுறுத்தி மாகாணசபை உறுப்பினர்களுக்கு, அநாமதேய கடிதங்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இது குறித்து, பிபிசியிடம் கருத்து வெளியிட்ட வடக்கு மாகாணசபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம்,  எட்டு வாகனங்களை – அதுவும் சமூகத்திற்கு கூடிய அளவில் சேவை செய்பவர்களுக்கு வழங்குவதாகக் கூறப்பட்டிருப்பது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல.

8 பேருக்கு மட்டும் வாகனங்களை வழங்குவது என்பது உறுப்பினர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும்.

எனவே வாகனங்கள் வழங்கினால் அனைவருக்கும் வழங்க வேண்டும்.

அமைச்சர்களுக்கும், அவைத் தலைவர் மற்றும் துணை அவைத்தலைவர் ஆகியோருக்கு சிறிலங்கா அரசு வாகனங்களை வழங்கியிருக்கிறது.

இரண்டரை ஆண்டுகளின் பின்னர் வரிவிலக்களிக்கப்பட்ட வாகனங்களைப் பெறுகின்ற உரிமை, இந்திய வாகனங்களைப் பெற்றுக் கொண்டால், உறுப்பினர்களுக்கு இல்லாமல் போய்விடுமோ என்ற பிரச்சினையும் இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *