நீர்மூழ்கி வருகை குறித்து முன்கூட்டியே தகவல் தருவதில்லை – சிறிலங்கா மீது இந்தியா விசனம்
சீன நீர்மூழ்கிகளின் கொழும்பு வருகை பற்றிய தகவல்களை சிறிலங்கா முன்கூட்டியே தெரியப்படுத்துவதில்லை என்று இந்தியா விசனம் தெரிவித்துள்ளது.
கடந்த இரண்டு மாதங்களில் சீனாவின் நீர்மூழ்கிகள் இரண்டு தடவைகள் கொழும்புத் துறைமுகத்துக்கு வந்து சென்றுள்ளன.
முதலாவது தடவை, சீன நீர்மூழ்கி கொழும்பு வந்து சென்ற பின்னர், கடந்த ஒக்ரோபர் மாதம் புதுடெல்லிக்கு பயணம் மேற்கொண்ட சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவுடன், இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் அருண் ஜேட்லியும், இந்திய தேசியபாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவலும் இந்த விவகாரம் குறித்துப் பேசியிருந்தனர்.
இதன்போதும், இதற்கு முன்னரும், சீனக் கடற்படைக் கப்பல்களின் வருகைகள் தொடர்பாக தமக்கு முன்கூட்டியே தகவல்களைத் தருமாறு சிறிலங்காவிடம் இந்தியா வலியுறுத்தியிருந்தது.
ஆனாலும், சீன நீர்மூழ்கிகளின் வருகை தொடர்பான தகவல்களை சிறிலங்கா அரசாங்கம் முன்கூட்டியே தெரியப்படுத்துவதில்லை என்று புதுடெல்லியில் உள்ள இந்திய மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
முன்கூட்டியே தகவல் தருமாறு நாம் திரும்பத் திரும்ப வலியுறுத்தியும் கூட, துறைமுகத்தில் சீனக்கப்பல் தரித்த பின்னரே, சிறிலங்கா அரசாங்கம் இந்தியத் தூதரகத்துக்குத் தகவல் தருகிறது என்று அந்த அதிகாரி தி ஹிந்து நாளிதழிடம் விசனம் வெளியிட்டுள்ளார்.