புலிகளுக்கு நோர்வே அளித்த உதவிகள் குறித்து விசாரிக்க வேண்டும் – மகிந்த ராஜபக்ச
நோர்வேயின் முன்னைய அரசாங்கம் விடுதலைப் புலிகளுக்கு அளித்த நிதியுதவிகள் குறித்து, விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார்.
குருநாகலில் இன்று நடந்த கூட்டம் ஒன்றில் உரையாற்றிய அவர்,
“நோர்வேயின் முன்னைய அரசாங்கம் விடுதலைப் புலிகளுக்கு அளித்த நிதியுதவிகள் குறித்து, விசாரணை செய்யப்பட வேண்டும்.
இந்தக் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை சிறிலங்கா அரசாங்கத்திடம் உள்ளன.
எனவே, தற்போதைய நோர்வே அரசாங்கம் இந்தக் குற்றச்சாட்டுக் குறித்து விசாரணை நடத்த வேண்டும்.
போர் நடந்து கொண்டிருந்த போது, விடுதலைப் புலிகளை சிறிலங்காப் படையினரால் தோற்கடிக்க முடியாது என்று நோர்வேயின் சமாதான தூதுவர் எரிக் சொல்ஹெய்ம், எமது அரசாங்கத்திடம் கூறியிருந்தார்.
எவ்வாறாயினும், சிறிலங்கா இராணுவத்தின் மீது நம்பிக்கையில்லை என்று கூறிய சொல்ஹெய்முக்கும், ஏனையவர்களுக்கும் அது தவறு என்று நிரூபிக்க முடிந்தது.
இப்போது, எரிக் சொல்ஹெய்ம், ஐ.நா விசாரணையின் முன்பாக சாட்சியம் அளிக்க முன்வந்துள்ளார்” என்றும் தெரிவித்துள்ளார்.