விடுதலைப் புலிகளைத் தடைசெய்யுமாறு ஐரோப்பிய ஒன்றியத்திடம் ரணில் கோரிக்கை
விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கிய ஐரோப்பிய நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யுமாறு, ஐரோப்பிய ஒன்றியத்திடம் ஐதேக தலைவர் ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக, ஐரோப்பிய ஒன்றியத்தின், வெளிவிவகார மற்றும் பாதுகாப்புக் கொள்கைக்கான பிரதிநிதி பெடெரிக்கா மொகேரினிக்கு அவர் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அதில், ஐரோப்பிய நீதிமன்றத் தீர்ப்புக்கு இட்டுச் சென்ற நடைமுறைத் தவறுகளைத் களைய வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
இந்த நடைமுறைத் தவறுகள் தான் விடுதலைப் புலிகளின் விண்ணப்பத்துக்குச் சார்பாக அமைந்திருந்தது.
அந்த தவறுகளை களைந்து ஐராப்பிய ஒன்றிய நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று தாம் கோரியுள்ளதாக ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடந்த தேசிய சுகாதார சேவைகள் பொது ஊழியர் சங்கத்தின் 31வது மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கப்பட்டதை எதிர்த்து. சிறிலங்கா அரசாங்கம் மேல் முறையீடு செய்யத் தவறியுள்ளதாக குற்றம்சாட்டிய அவர், அதனைச் செய்ய வேண்டியது அரசாங்கத்தின் கடமை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், தன்னை விடுதலைப் புலிகளின் ஆதரவாளர் என்று பெயர் குத்த சிறிலங்கா அரசாங்கம் முனைவதாகவும், ஆனால் தானே அவர்களைத் தடை செய்யுமாறு கோரியுள்ளதாகவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.