சிறிலங்கா குறித்த அல் ஹுசேனின் கருத்துக்கு பான் கீ மூனும் ஆதரவு
ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்துடன் சிறிலங்கா அரசாங்கம் ஒத்துழைக்க வேண்டும் என்று ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஐ.நாவுக்கு ஒத்துழைப்போரை அச்சுறுத்தி, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகம் நடத்தும் விசாரணைகளை சீர்குலைக்க சிறிலங்கா அரசாங்கம் முயற்சிப்பதாக, கடந்தவாரம், ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் குற்றம்சாட்டியிருந்தார்.
இதுதொடர்பாக ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனின் நிலைப்பாடு என்ன என்று, நியுயோர்க்கில் நேற்று ஐ.நா பொதுச்செயலரின் பிரதிப் பேச்சாளர் பர்ஹான் ஹக்கிடம், கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அவர், “ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேனின் கருத்துக்களை ஐ.நா பொதுச்செயலர் ஆதரிக்கிறார்.
சிறிலங்கா அரசாங்கம் ஒத்துழைக்க வேண்டும் என்ற செயிட் ராட் அல் ஹுசேனின், நிலைப்பாட்டை அவர் ஏற்றுக் கொள்கிறார்.
அவர்களை ஒத்துழைக்குமாறு நாம் தொடர்ந்து வலியுறுத்துவோம்” என்று பதிலளித்துள்ளார்.
அதேவேளை, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் எல்லை மீறிப் பேசுகிறார் என்று ஜெனிவாவுக்கான சிறிலங்கா பிரதிநிதி ரவிநாத ஆரியசிங்க குற்றம்சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.