சிறிலங்காவுக்கு பொருத்தமான முறையில் கண்டனம் – ஐ.நா மனித உரிமை ஆணையாளருக்கு அமெரிக்கா வரவேற்பு
சிறிலங்காவுக்கு ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் பொருத்தமான முறையில் கண்டனத்தை தெரிவித்துள்ளதாக, ஜெனிவாவுக்கான அமெரிக்க தூதுவர் கீத் ஹாப்பர் தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவில் இடம்பெற்ற மீறல்கள் குறித்து விசாரிக்கும் ஐ.நா விசாரணைக் குழுவுக்கு ஒத்துழைப்பு வழங்குவோரை அச்சுறுத்தி, விசாரணைகளை சீர்குலைக்க முயன்று வருவதாக சிறிலங்கா அரசாங்கம் மீது, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் கடந்தவாரம் கண்டனம் தெரிவித்திருந்தார்.
இதுதொடர்பாக, ஜெனிவாவுக்கான அமெரிக்கத் தூதுவர் கீத் ஹாப்பர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவு ஒன்றில், ஐ.நா விசாரணைக்கு எதிராக இடைவிடாத பொய் பரப்புரைகளை மேற்கொள்ளும் சிறிலங்காவுக்கு, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பொருத்தமான கண்டனத்தை வெளியிட்டுள்ளதாக வரவேற்றுள்ளார்.
அதேவேளை, ஐ.நாவுக்கு ஒத்துழைப்பு வழங்குவோரை மௌனமாக்க சிறிலங்கா முயற்சிப்பதாகவும், அது ஐ.நாவின் மீதான தாக்குதல் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும் என்று கீத் ஹாப்பர் கடந்த வாரம் டுவிட்டர் பதிவு ஒன்றில் எச்சரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.