தமிழ்நாட்டு மீனவர்களை இந்தியச் சிறைக்கு மாற்ற இணங்கினார் மகிந்த
கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள ஐந்து தமிழ்நாட்டு மீனவர்களையும், இந்தியச் சிறைக்கு மாற்றுவதற்கு சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச இணங்கியுள்ளதாக, பாஜக பிரமுகர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
தாம் வரும் 24ம் நாள் கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளதாகவும், அங்கிருந்து மீனவர்களுடன் திரும்புவேன் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் டுவிட்டரில் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதேவேளை,சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் நேற்று தொலைபேசியில் இந்த விவகாரம் குறித்துப் பேசியதாக தமக்கு கொழும்பில் இருந்து நம்பகமான தகவல் கிடைத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதன்போது மீனவர்களை இந்தியச் சிறை ஒன்றில் தண்டனையை அனுபவிக்கலாம் என்றும், பின்னர், உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்து தங்களின் தண்டனை தொடர்பாக மீனவர்கள் உரிய தீர்ப்பை பெறமுடியும் என்றும் மகிந்த ராஜபக்ச ஆலோசனை கூறியதாகவும் சுப்பிரமணியன் சுவாமி தகவல் வெளியிட்டுள்ளார்.
இதற்கிடையே சிறிலங்கா அதிபர் செயலகமும், இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கிற்கும், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கும் இடையில் நடந்த தொலைபேசி உரையாடலை உறுதிப்படுத்தியுள்ளது.
எனினும், இந்த விவகாரத்தில் சிறிலங்கா அதிபர் எந்த முடிவையும் எடுக்கவில்லை என்று, சிறிலங்கா அதிபர் செயலகப் பேச்சாளர் ஒருவர் இந்திய ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா அதிபரே நேற்று இந்திய பிரதமரை தொலைபேசியில் அழைத்துப் பேசியதாகத் தற்போது தெரியவந்துள்ளது.