மகிந்தவினால் போட்டியிட முடியுமா? – உயர்நீதிமன்றத்தின் பதில் இன்று
அதிபர் தேர்தலில் மூன்றாவது தடவையும் தான் போட்டியிட முடியுமா என்று, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, விடுத்திருந்த கோரிக்கைக்கு சிறிலங்காவின் உயர்நீதிமன்றம் இன்று பதில் அளிக்கவுள்ளது.
கடந்த புதன்கிழமை மகிந்த ராஜபக்ச உயர்நீதிமன்றத்திடம் இதற்கான சட்ட விளக்கத்தைக் கோரியிருந்தார்.
இன்று 10ம் நாள், இதுதொடர்பாக பதிலளிக்குமாறும் அவர் உயர்நீதிமன்றத்திடம் கேட்டிருந்தார்.
இந்த மனு தொடர்பாக பகிரங்க விவாதம் நடத்துமாறு சிறிலங்காவின் சட்டவாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்த போதிலும், ஏற்கனவே விசாரணைகள் முடிந்து விட்டதாக உயர்நீதிமன்றப் பதிவாளர் கடந்த வெள்ளிக்கிழமை தெரிவித்திருந்தார்.
அதேவேளை, சிறிலங்கா அதிபரின் மனு தொடர்பாக, 34 கருத்துக்கள் உயர்நீதிமன்றிடம் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன.
இந்தநிலையில், சிறிலங்கா அதிபரின் கோரிக்கை தொடர்பாக உயர்நீதிமன்றம் இன்று சட்ட விளக்கத்தை அதிபர் செயலகத்துக்கு அனுப்பி வைக்கவுள்ளது.