பொதுவேட்பாளருக்கு முஸ்லிம் காங்கிரசும் பச்சைக்கொடி?
முஸ்லிம்களின் பிரச்சினைகளைத் தீர்க்க பொதுவேட்பாளர் தயாராக இருந்தால், அத்தகைய வேட்பாளரை எந்த சந்தேகமுமின்றி சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரிக்கும் என்று கட்சியின் பொதுச்செயலர் ஹசன் அலி தெரிவித்துள்ளார்.
முஸ்லிம் மக்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு அளித்த வாக்குறுதிகளை சிறிலங்கா அரசாங்கம் நிறைவேற்றவில்லை.
எனவே அரசாங்க வேட்பாளரை சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரிக்க வேண்டியதில்லை.
நீண்டகாலத்துக்கு சிறிலங்கா அரசாங்கத்துடன் முஸ்லிம் காங்கிரஸ் நின்றால், முஸ்லிம் மக்கள் எமக்கு வாக்களிக்கமாட்டார்கள்.
தற்போதைய அரசியலமைப்பின் படி, சிறுபான்மையினத்தவர்கள் எவராலும் நாட்டின் அதிபராக முடியாது.
எனவே பொதுவேட்பாளர் என்பது பெரும்பான்மையினத்தவர்களின் கரிசனைக்குரிய விவகாரமாகவே உள்ளது.
வேட்பாளர்களுடன் நாம் அவர்களின் தேர்தல் அறிக்கைகளை முன்வைத்து பேச்சு நடத்துவோம்.
நிறைவேற்று அதிகார ஆட்சிமுறை முற்றாக ஒழிக்கப்பட்டு, ஜனநாயகம் வலுப்படுத்தப்பட வேண்டும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இந்த அடிப்படையிலேயே செயற்படும்.
எமக்கு யார் உதவுகிறார்களோ, அவர்களுக்கு நாம் உதவுவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.