எல்லை மீறுகிறார் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் – சிறிலங்கா பிரதிநிதி விசனம்
ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயித் ராட் அல் ஹுசேன், எல்லைமீறி வார்த்தைகளை வெளியிட்டுள்ளதாக, ஜெனிவாவுக்கான சிறிலங்காவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி ரவிநாத ஆரியசிங்க விசனம் தெரிவித்துள்ளார்.
நேற்று ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயித் ராட் அல் ஹுசேன் வெளியிட்டிருந்த அறிக்கையில், சிறிலங்கா அரசாங்கம் ஐ.நா விசாரணைகளை சீர்குலைக்க முனைவதாகவும், இது ஐ.நாவை அவமதிக்கும் செயல் என்றும் குற்றம்சாட்டியிருந்தார்.
இதுகுறித்து, ஜெனிவாவுக்கான சிறிலங்கா பிரதிநிதி ரவிநாத ஆரியசிங்க, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயித் ராட் அல் ஹுசைனுக்கு இன்று அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே, எல்லைமீறி வார்த்தைகளை பயன்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
“ஐ.நா சபையில் உறுப்புரிமை கொண்ட, இறையாண்மையுள்ள நாட்டின் மீது ஐ.நா மனித உரிமை ஆணையாளர் எல்லைமீறிய வார்த்தைகளை பயன்படுத்தியுள்ளார். இது வருந்தத்தக்கது.
ஜனநாயக முறையில் தேர்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் மீது அவர் அவதூறு ஏற்படுத்தியுள்ளதுடன், அதனை இழிவுபடுத்தியும் உள்ளார்.
இந்த நடவடிக்கை, சிறிலங்கா அரசாங்கம் தொடர்ந்து ஐ.நாவுடன் தொடர முயன்று வருகின்ற ஆக்கபூர்வமான செயற்பாடுகளை கட்டுப்படுத்தக் கூடியவையாகும்” என்றும் தெரிவித்துள்ளார்.