மீரியபெத்தவில் இன்று 2 சடலங்கள் மீட்பு – உதவ வருகிறது பாகிஸ்தான் இராணுவக்குழு
மலையகத்தில் நிலச்சரிவில் சிக்கிய மீரியபெத்த தோட்டத்தில், மண்ணுக்குள் புதைந்து போன இருவரின் சடலங்கள் இன்று நடத்தப்பட்ட தேடுதலின் போது மீட்கப்பட்டுள்ளன. (படங்கள் இணைப்பு)
இதையடுத்து கடந்த வாரம் இடம்பெற்ற இந்த அனர்த்தத்தில் உயிரிழந்து மீட்கப்பட்ட சடலங்களின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது.
இன்று மீட்கப்பட்ட சடலங்களில் ஒன்று குழந்தையுடையது என்றும், மற்றது 54 வயதுடைய பெண்ணுடையது என்றும் மீட்பு நடவடிக்கைகளுக்குப் பொறுப்பாக சிறிலங்கா இராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் மனோ பெரேரா தெரிவித்துள்ளார்.
இன்று 10வது நாளாகவும், இந்தப் பகுதியில் மீட்பு நடவடிக்கை இடம்பெற்றது.
இதற்கிடையே, மீரியபெத்தவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான இரண்டு விமானங்களில் உதவிப் பொருட்களை அனுப்பி வைத்துள்ள பாகிஸ்தான், மீட்பு நிவாரணப் பணிகளுக்கு சிறிலங்கா இராணுவத்துக்கு உதவ பாகிஸ்தான் இராணுவத் தொழில்நுட்பக் குழுவொன்றை அனுப்பவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.