சண் மாஸ்டர் இந்தியாவுக்குத் தப்பிவிட்டாராம்
ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகம் நடத்தும் விசாரணைகளுக்கு சாட்சியப் படிவங்களை விநியோகித்தார் என்ற குற்றச்சாட்டில் சிறிலங்கா காவல்துறையினரால் தேடப்பட்டு வந்தவர் இந்தியாவுக்குத் தப்பிச் சென்றுள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஐ.நா விசாரணைக்கான சாட்சியங்களை அனுப்புவதற்காக ஒருதொகைப் படிவங்களுடன் கிளிநொச்சியில் வைத்து, சின்னத்தம்பி கிருஸ்ணராசா என்பவர் கடந்த மாதம் 25ம் நாள் கைது செய்யப்பட்டிருந்தார்.
அவருக்கு இந்தப் படிவங்களை வவுனியாவைச் சேர்ந்த சண் மாஸ்டர் என்ற ஆழ்வாப்பிள்ளை விஜயகுமார் என்பவரே வழங்கியதாக, கூறி சிறிலங்கா காவல்துறையினர் தேடி வந்தனர்.
இவர் நீர்கொழும்பு வழியாக படகில் நேற்று முன்தினம் இந்தியாவுக்குத் தப்பிச்சென்று விட்டதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் தெரிவித்துள்ளது.
இவர் ஐ.நாவுக்கு போலியான சாட்சியங்களை அனுப்ப முயன்றார் என்று சிறிலங்கா அரசாங்கம் கூறி வருகிறது.
அதேவேளை, சண் மாஸ்டர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வவுனியா அமைப்பாளர் என்று அரசாங்கம் சுமத்திய குற்றச்சாட்டை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிராகரித்துள்ளது.