மணிப்பால் செல்கிறார் சிறிலங்கா பிரதமர் – கர்நாடகத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு
சிறிலங்கா பிரதமர் டி.எம்.ஜெயரத்ன நாளை மணிப்பால் செல்லவுள்ள நிலையில், கர்நாடக மாநிலத்தில் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
கர்நாடக மாநிலத்தில் உள்ள மணிப்பால் பல்கலைக்கழகத்தின் 19வது பட்டமளிப்பு விழாவில் பிரதம விருந்தினராக சிறிலங்கா பிரதமர் கலந்து கொள்ளவுள்ளார்.
மணிப்பாலில் உள்ள கேம்எம்சி கிறீன்ஸ்சில் நடக்கவுள்ள இந்த நிகழ்வில், சிறிலங்கா பிரதமர் பங்கேற்கவுள்ளதால், அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மங்களூர் விமான நிலையத்தில் இருந்து நாளை தரைவழியாக சிறிலங்கா பிரதமர் மனிப்பால் செல்லலாம் என்றும், மீண்டும் அவர், அதேவழியாக நாளை மறுநாள் மங்களூர் திரும்புவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதையடுத்து இந்த வழிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், விடுதிகளில் தங்கியிருப்போர் விபரங்களைச் சமர்ப்பிக்குமாறும் கர்நாடக காவல்துறை உத்தரவிட்டுள்ளது.
மங்களூருக்கும் மணிப்பாலுக்கும் இடைப்பட்ட பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் வீதியோரங்களில் வாகனங்களை நிறுத்தவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
நெடுஞ்சாலையை நோக்கியுள்ள அறைகளை வாடகைக்கு விட வேண்டாம் என்றும் அத்தகைய அறைகளின் ஜன்னல்களை மூடிவைக்குமாறும் விடுதி நிர்வாகங்களுக்கு காவல்துறை உத்தரவிட்டுள்ளது.
பாலங்களையும் நெடுஞ்சாலையையும் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக, காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.