சென்னை சென்றடைந்தார் முதலமைச்சர் விக்னேஸ்வரன் – செய்தியாளர்களைச் சந்திக்க மறுப்பு
சென்னையில் நடைபெறவுள்ள கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்பதற்காக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இன்று காலை தமிழ்நாட்டுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து, விமானம் மூலம் இன்று காலை சென்னையை சென்றடைந்த அவரைச் சந்திக்க சென்னை விமான நிலையத்தில் பெருமளவு செய்தியாளர்கள் காத்திருந்தனர்.
எனினும், செய்தியாளர்களிடம் எந்தக் கருத்தையும் வெளியிடாமல் அவர், விமான நிலையத்தை விட்டுப் புறப்பட்டுச் சென்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னையில் நடைபெறும் மக்கள் சிவில் உரிமைக் கழக விழாவில் பங்கேற்பதற்காகவே முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இந்தியா சென்றுள்ளார்.
பி.யூ.சி.எல். அமைப்பு ஏற்பாடு செய்துள்ள கே.ஜி.கண்ணபிரான் நினைவு சொற்பொழிவு நிகழ்வு நாளை மறுநாள் காலை 11 மணியளவில், தியாகராய நகர், திருமலை சாலையில் உள்ள வித்யோதயா பாடசாலையில் இடம்பெறவுள்ளது.
இந்த நிகழ்வில் சி.வி.விக்னேஸ்வரன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, ‘பாதுகாப்பையும், இறையாண்மையும் பாதுகாத்தல்’ என்ற தலைப்பில் சிறப்புரையாற்றவுள்ளார்.
இந்த நிகழ்வில், தென்னாப்பிரிக்க நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி சக்கரியா முகமது யாகூப், எழுத்தாளர் வசந்த் கண்ணபிரான் ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளனர்.