மேலும்

“கூட்டமைப்பைக் கொச்சைப்படுத்த வேண்டாம்” – மத்திய மாகாணசபை உறுப்பினர் ராஜாராம்

நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வடக்கில் காணிகளை வழங்கத் தயாராக இருப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் உணர்வுபூர்வமாக வெளியிட்ட கருத்தை கொச்சைப்படுத்த வேண்டாம்  என்று மத்திய மாகாணசபை உறுப்பினர் ஆர்.ராஜாராம் தெரிவித்துள்ளார்.

மீரியபெத்த பகுதியில் பாதிக்கப்பட்ட மக்கள் விரும்பினால் நாங்கள் வடக்கில் காணிகளை வழங்கத் தயாராக இருக்கிறோம் என்று, பாதிக்கப்பட்ட பிரதேசத்துக்குச் சென்று அங்குள்ள நிலைமைகளை நேரில் பார்த்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் உணர்வுபூர்வமாக தெரிவித்தனர்.

ஆனால், அரசியலில் அனுபவமில்லாத – தமிழ் தேசிய கூட்டமைப்பு மலையகத்துக்கு வருவதை விரும்பாத – சில அரசியல்வாதிகள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கருத்தை கொச்சைப்படுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

1983ஆம் ஆண்டு இடம்பெற்ற இனக்கலவரத்தில் பாதிக்கப்பட்ட மலையகத்தைச் சேர்ந்த பெருந்தோட்டத் தொழிலாளர்கள் இடம்பெயர்ந்து, வவுனியா உட்பட வடபகுதிகளில் இன்றும் வாழ்ந்து வருகின்றனர்.

அந்த விடயங்களைக் கருத்தில் கொண்டே கூட்டமைப்பினர் அவ்வாறானதொரு கருத்தை வெளியிட்டிருக்கலாம்.

அது மட்டுமல்லாமல் பெருந்தோட்ட மக்களின் வீட்டுப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதையும், இது தொடர்பாக அவர்கள் இந்தியாவுக்கு அழுத்தம் கொடுக்கவுள்ளமை பற்றியும் குறிப்பிட்டுள்ளார்கள்.

இந்த கருத்துக்கள் மிகவும் வரவேற்கக்கூடிய விடயங்களாகவே நான் கருதுகின்றேன்.

இன்று அனைத்துலக ரீதியாக எமது மக்கள் பேசப்படுகிறார்கள் என்றால் அதற்கு காரணம் மலையக அரசியல் தலைவர்கள் அல்ல.

மீரியபெத்த பகுதியில் உயிர்நீத்த மக்களின் தியாகமாகவே இதனை கருத வேண்டும்.

இந்த சம்பவத்துக்குப் பின்னர், அமெரிக்கா, இந்தியா உட்பட இன்னும் பல நாடுகளும் முதல் முறையாக மலையக மக்களுக்கு உதவி செய்ய முன்வந்துள்ளதானது, பெருந்தோட்ட மக்களை பொறுத்தவரை மிகவும் காலத்திற்கு ஏற்ற ஒரு விடயமாகவே பார்க்க வேண்டும்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒன்பது நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒற்றுமையாக அந்த இடத்துக்குச் சென்று, நிலைமைகளை நேரில் ஆராய்ந்தமையானது அவர்களின் ஒற்றுமையை எடுத்துக் காட்டுகிறது.

ஆனால் மலையகத்தில் இருக்கின்ற ஒரு சிலர், இன்னும் அந்த மக்களையோ அந்த இடத்தையோ சென்று பார்வையிடவில்லை என்பதும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டிய விடயமாகும்.

எனவே தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தொடர்ந்தும் மலையக மக்களுக்காக இலங்கையில் மட்டுமல்ல அனைத்துலக ரீதியாகவும் குரல் கொடுக்க வேண்டும் என்பதையே மலையக மக்கள் முன்னணி விரும்புகிறது.

அவர்களுடன் எமது மக்களின் நலன் கருதி நாமும் ஒன்றிணைந்து செயற்படத் தயாராகவே உள்ளோம் என்பதையும் நான் கூற விரும்புகின்றேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *