அநாதரவான பிள்ளைகளுக்கு கல்வி வசதி செய்து கொடுக்கத் தயார் – மீரியபெத்தவில் முதல்வர் விக்னேஸ்வரன்
பாரிய மண்சரிவு அனர்த்தம் இடம்பெற்ற பதுளை, மீரியபெத்த பிரதேசத்துக்கு, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், இன்று பயணம் மேற்கொண்டு, பாதிக்கப்பட்ட இடங்களைப் பார்வையிட்டதுடன், அனாதரவாக்கப்பட்ட பிள்ளைகளுக்கு கல்வி வழங்க தான் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மண்சரிவு இடம்பெற்ற இடத்துக்கு, ஜனநாயக மக்கள் முன்னணித் தலைவர் மனோ கணேசன் மற்றும் மத்திய மாகாண சபை உறுப்பினர் வேலு குமார் உள்ளிட்டோருடன் சென்ற முதலமைச்சர் விக்னேஸ்வரன்,, பின்னர் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கியுள்ள பூணாகலை கணேச வித்தியாலயத்துக்கும் மக்களுடன் கலந்துரையாடினார்.
இதன்பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த, அவர்,
இந்த மண்சரிவால் பாதிக்கப்பட்டு, பெற்றோரை இழந்த பிள்ளைகளின் கல்விக்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த பிள்ளைகளை யாழ்ப்பாணத்தில் தங்கவைத்து கல்வி வாய்ப்பைப் பெற்றுக் கொடுக்க நான் தயாராக இருக்கிறேன்.
அவர்கள் விரும்பினால், கொழும்பில் கல்வி கற்பதற்கான வசதி வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்கவும் தயாராக உள்ளேன்.” என்றும் தெரிவித்துள்ளார்.