சீன நீர்மூழ்கி மீண்டும் வருகை – இந்தியா கடும் கோபம்
இந்தியாவின் கவலைகளைப் பொருட்படுத்தாமல், சீன நீர்மூழ்கிக் கப்பல் கொழும்புத் துறைமுகத்தில் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளது, இந்தியாவைக் கோபத்துக்குள்ளாகியுள்ளதாக, இந்திய நாளிதழான எக்கொனமிக் ரைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த செப்ரெம்பர் மாதம் கொழும்புத் துறைமுகத்துக்கு சீன நீர்மூழ்கிக் கப்பல் வந்த்து குறித்து இந்தியா ஆழ்ந்த கவலையை வெளியிட்ட நிலையில், மற்றொரு நீர்மூழ்கிக்கு சிறிலங்கா அனுமதி அளித்துள்ளது.
பாக்கு நீரிணைப் பகுதிக்கு சீன நீர்மூழ்கிகள் வரத் தொடங்கியுள்ளது இந்திய அரசாங்கத்தை கடுமையாக குழப்பமடையச் செய்துள்ளது.
இதனால், சிறிலங்கா அதிகாரிகள் மீண்டும், அழைக்கப்பட்டு, இம்முறை கடுமையான அதிருப்தி தெரிவிக்கப்படும்.
வியட்னாம் பிரதமர், நுகுயென் தன் டங் இந்தியப் பயணத்தை மேற்கொண்டிருந்த சந்தரப்பத்திலேயே இரண்டாவது சீன நீர்மூழ்கி கொழும்பு வந்துள்ளது.
முன்னதாக, சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச கடந்த மாதம் 20ம் நாள் புதுடெல்லிக்கு அழைக்கப்பட்டு, சின நீர்மூழ்கிக்கு இடமளிக்கப்பட்டது குறித்து இந்தியா அதிருப்தியை வெளியிட்டிருந்தது.
அதனை அலட்சியம் செய்யும் வகையில் மீண்டும் சீன நீர்மூழ்கிக்கு சிறிலங்கா அனுமதி அளித்துள்ளது.
கோத்தபாய ராஜபக்சவிடம் அதிருப்தி வெளியிடப்பட்ட நிலையிலும், சீன நீர்மூழ்கி அனுமதிக்கப்பட்டது இந்தியாவைக் கோபமடையச் செய்துள்ளதாகத் தெரிகிறது.
இதனால் இம்முறை கடுமையான அதிருப்தியை இந்தியா தெரிவிக்கும் என்றும் எக்கனொமிக் ரைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.