உள்நாட்டு விசாரணைக்கு அனுமதியுங்கள் – அமெரிக்கா, உறுப்பு நாடுகளுக்கு சிறிலங்கா அவசர கடிதம்
போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக , அனைத்துலக நீதிபதிகள், விசாரணையாளர்கள், சட்டவாளர்களை உள்ளடக்கிய கலப்பு நீதிமன்றத்தை அமைப்பதற்குப் பதிலாக, உள்நாட்டு விசாரணையை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று, சிறிலங்கா அரசாங்கம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளிடமும், அமெரிக்காவிடமும், அவசர வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுதொடர்பாக தகவல் வெளியிட்டுள்ள சிறிலங்காவின் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச,
‘இந்த அவசர கோரிக்கை அடங்கிய கடிதங்கள், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் 47 நாடுகளின் அரச தலைமைகளிடம் கையளிப்பதற்காக, கொழும்பில் உள்ள அந்தந்த நாடுகளின் தூதரகங்களில் கையளிக்கப்பட்டுள்ளன.
மேலும், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்திடமும், இந்த வேண்டுகோள் கடிதம் கையளிக்கப்பட்டுள்ளது.
இந்த கடிததத்தில், சிறிலங்காவின் புதிய அரசாங்கம், நீதித்துறை சுதந்திரத்தை உறுதிப்படுத்தியுள்ளதாகவும், அரசியல் தலையீடுகள் தவிர்க்கப்பட்டுள்ளதாகவும், மனித உரிமை விவகாரங்களை அனைத்துலக நீதிபதிகளின் பங்களிப்பின்றி, உள்நாட்டு நீதிமன்றங்களால் தீர்க்க முடியும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டார்.
போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரிக்க, அனைத்துலக நீதிபதிகளின் பங்களிப்புடன், கலப்பு விசாரணை நடத்த வலியுறுத்தும், தீர்மான வரைவை ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளிடம், அமெரிக்கா கையளித்துள்ள நிலையிலேயே, சிறிலங்கா அரசாங்கத்தின் சார்பில் இந்த அவசர கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.