உண்மை ஆணைக்குழுவை அமைக்கப் போகிறதாம் சிறிலங்கா – ஜெனிவாவில் மங்கள வாக்குறுதி
சிறிலங்கா அரசாங்கம் உண்மை ஆணைக்குழு ஒன்றை அமைக்கவுள்ளதாகவும், காணாமற்போனோர் குறித்த பணியகம் ஒன்றை திறக்கவுள்ளதாகவும், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் வாக்குறுதி அளித்துள்ளது.
ஜெனிவாவில் இன்று ஆரம்பமான ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 30ஆவது கூட்டத்தொடரில் சற்று முன்னர் உரையாற்றிய சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இந்த வாக்குறுதியை அளித்துள்ளார்.
மேலும் அரசியலமைப்புத் திருத்தங்களின் மூலமாக, அரசியல் தீர்வு ஒன்றை உறுதிப்படுத்தவுள்ளதாகவும், அவர் குறிப்பிட்டுள்ளார்.
”சிறிலங்காவில் அமைக்கப்பட்டுள்ள தேசிய அரசாங்கம் பொறுப்புக்கூறல் விடயத்தில் முன்னின்று செயற்படும்.
எதிர்க்கட்சி தலைவராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நியமிக்கப்பட்டமை மற்றும் 44ஆவது பிரதம நீதியரசர் நியமனம் என்பன, தற்போதைய அரசாங்கத்தினால் இன, மத, மொழி, பால், வேறுபாடுகள் காரணமாக பொருத்தமுடைவர்களுக்கான நியமனங்கள் மறுக்கப்படாது என்பதை தெளிவுபடுத்தியுள்ளன.
சிறிலங்கா படையினர் மீது போர்க்குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தாலும், அது ஒரு சிலர் செய்த தவறேயாகும்.
இனிமேல் அவ்வாறு நடைபெறமாட்டாது என்பதை உறுதிப்படுடுத்தும் வகையில் சிறிலங்கா அரசாங்கத்தின் செயற்பாடுகள் அமையும்.
அதேவேளை, அனைத்துலக அமைப்புக்களின் உதவியுடன், பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் அனைத்து மக்களையும் ஒன்றிணைத்து உள்ளக விசாரணை முன்னெடுக்கப்படும்.
இந்த உண்மை கண்டறியும் செயல்முறை இரண்டு பொறிமுறைகளாக மேற்கொள்ளப்படும்.
முதலாவதாக, தென்னாபிரிக்காவில் அமைக்கப்பட்டது போன்று உண்மை, நீதி, நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழு அமைக்கப்படும்.
இரண்டாவதாக, காணாமற்போனோர் குறித்த பணியகம் ஒன்று அனைத்துலக தர நியமங்களுக்கு ஏற்ப அமைக்கப்படும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பால குமாரா?