பதவி பறிக்கப்பட்ட முன்னாள் பாதுகாப்புச் செயலர் பஸ்நாயக்க காத்திருப்பு நிலைக்கு அனுப்பப்பட்டார்
அண்மையில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பி.எம்.யூ.டி.பஸ்நாயக்க எந்தப் பதவியும் வழங்கப்படாமல், காத்திருப்பு நிலைக்கு (pool) அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
சிறிலங்காவில் அண்மையில் புதிய அமைச்சரவை பொறுப்பேற்ற பின்னர், அமைச்சுக்களின் செயலாளர்கள் மாற்றப்பட்டனர்.
கடந்த ஜனவரி மாதம் தொடக்கம் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலராக இருந்த, பி.எம்.யூ.டி.பஸ்நாயக்கவும் அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டு, புதிய செயலராக, கருணாசேன ஹெற்றியாராச்சி நியமிக்கப்பட்டார்.
அதேவேளை, பாதுகாப்புச் செயலர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட, பி.எம்.யூ.டி.பஸ்நாயக்கவுக்கு வேறு பதவிகள் ஏதும் வழங்கப்படவில்லை.
அவர் காத்திருப்பு நிலையில் உள்ள சிறிலங்கா நிர்வாக சேவை அதிகாரிகளுடன் இணைந்து கொண்டுள்ளார்.
அண்மைய மாற்றங்களின் பின்னர், கடற்றொழில் அமைச்சின் செயலர் என்.டி.ஹெற்றியாராச்சி உள்ளிட்ட 7 நிர்வாக சேவை அதிகாரிகள் காத்திருப்பு நிலைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
அதேவேளை, முன்னர் இராஜாங்க அமைச்சுக்களின் செயலர்களாக இருந்த அதிகாரிகள் பலருக்கு அமைச்சுக்களின் செயலர்களாகப் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.