நல்லாட்சி, பொறுப்புக்கூறலுக்கான நகர்வுகளை புதிய அரசு முன்னெடுக்க வேண்டும்- பான் கீ மூன்
நல்லாட்சி, பொறப்புக்கூறல், நல்லிணக்கத்துக்கான மேலதிக நகர்வுகளை சிறிலங்காவின் புதிய அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார் ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன்.
சிறிலங்கா அதிபர் தேர்தலில், வெற்றி பெற்றுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ள, ஐ.நா பொதுச்செயலர், நல்லாட்சி, பொறுப்புக்கூறல், நல்லிணக்கத்துக்கான மேலதிக நகர்வுகளை சிறிலங்காவின் புதிய அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் என்றும் கோரியிருக்கிறார்.
இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள ஐ.நா பொதுச்செயலரின் பேச்சாளர், நாடாளுமன்றத் தேர்தலில் அமைதியான முறையிலும், பரந்தளவிலும் பங்கேற்ற சிறிலங்கா மக்கள் குறித்து ஐ.நா பொதுச்செயலர் பாராட்டுத் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
மக்களின் வாக்குரிமையை உறுதிப்படுத்திய அதிபர் மைத்திரிபால சிறிசேன மற்றும் தேர்தல் ஆணையாளருக்கும் அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவில் நீடித்த அமைதியையும் செழிப்பையும் கட்டியெழுப்ப அதிபர், பிரதமர், அரசாங்கம் மக்கள் அனைவரும், ஆதரவளிக்க வேண்டும் என்றும் ஐ.நா பொதுச்செயலர் கேட்டுக் கொண்டுள்ளார்.