போர்க்குற்ற, மனித உரிமை மீறல் கரிசனைகளை சிறிலங்காவிடம் வெளிப்படுத்துவார் ஜோன் கெரி
சிறிலங்காவின் மனித உரிமை மீறல்கள் குறித்த அமெரிக்காவின் நீண்டகால கரிசனைகள் மற்றும் போர்க்குற்றங்கள் குறித்த விசாரணைகளை, சிறிலங்காவிடம் அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி வலியுறுத்துவார் என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி, வரும் சனிக்கிழமை சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் சிறிலங்காவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உறவுகளில் முறுகலான நிலை இருந்து வந்தது.
ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர், இருதரப்பு உறவுகள் சுமுகமடைந்துள்ள நிலையில், ஜோன் கெரியின் இந்தப் பயணம் இடம்பெறவுள்ளது.
இந்தப் பயணத்தின் போது, வெற்றிகரமாக நடத்தப்பட்ட அதிபர் தேர்தல் மற்றும் சுமுகமாக நடந்த அதிகார கைமாற்றல் குறித்து ஜோன் கெரி, சிறிலங்காவுக்குப் பாராட்டுத் தெரிவிப்பார் என்று ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், சிறிலங்காவின் உள்நாட்டுப் போரின் போது, இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும், மனித உரிமைகள் குறித்த அமெரிக்காவின் நீண்டகால கரிசனைகளை ஜோன் கெரி சுட்டிக்காட்டுவார் என்று அமெரிக்க அதிகாரிகள் ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.