19வது திருத்தத்தை நிறைவேற்ற மைத்திரி பெரும் போராட்டம் – இணப்பாட்டை ஏற்படுத்த முயற்சி
19வது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பான ஆளும்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையில் ஏற்பட்டுள்ள இழுபறிகளைத் தீருக்கும் கடைசி நேர முயற்சியில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, இன்று காலை தொடக்கம், நாடாளுமன்றத்தில் 19வது திருத்தம் மீதான விவாதம் நடந்து வருகிறது.
அதேவேளை, இந்த திருத்த்த்துக்கு சுதந்திரக் கட்சியின் ஆதரவை முழுமையாக உறுதிப்படுத்துவது மற்றும், முன்வைக்கப்பட்டுள்ள திருத்தங்கள் விடயத்தில் இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் முயற்சிகளில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன ஈடுபட்டுள்ளார்.
அவரது முயற்சியால், இன்று காலையில், அரசியலமைப்புச் சபைக்கு, நாடாளுமன்ற உறுப்பினர்களையும், துறைசார் நிபுணர்களையும் நியமிப்பதென்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணக்கப்பாடு காணப்பட்டது.
எனினும், எந்த விகிதத்தில், இவர்களை நியமிப்பது என்பதில் இணக்கம் ஏற்படவில்லை என்று ஆரம்பக்கட்டத் தகவல்கள் தெரிவித்தன.
அரசியலமைப்புச் சபைக்கு துறைசார் நிபுணர்களை மட்டும் நியமிக்கப்பட வேண்டும் என்பது அரசாங்கத்தின் நிலைப்பாடாக இருக்கின்ற அதேவேளை, அதில் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இடம்பெற வேண்டும் என்பது, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பிடிவாதமாக இருந்து வருகிறது.
இந்தநிலையில், இன்று மதியம் 12 மணியளவில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும், பிரதமர் ரணில் விக்கிரமைசிங்கவுக்கும் இடையில், சிறப்பு பேச்சுக்கள் நடத்தப்பட்டன.
இதன் போது, அரசியலமைப்புச் சபை தொடர்பாகவே பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ளன.
அதையடுத்து, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினர்களுடன் மைத்திரிபால சிறிசேன பேச்சுக்களை நடத்திக் கொண்டிருப்பதாக பிந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் பின்னர், ரணில் விக்கிரமசிங்கவை, மைத்திரிபால சிறிசேனவும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினர்களும் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளனர்.
இன்று மாலை 6 மணியளவில், 19வது திருத்தம் மீது இறுதி வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அதற்கான ஆதரவை உறுதிப்படுத்தி, திருத்தங்கள் தொடர்பான முரண்பாடுகளைக் களைந்து, நிறைவேற்றும் முயற்சியில் மைத்திரிபால சிறிசேன கடும் பிரயத்தனம் மேற்கொண்டு வருகிறார்.
மைத்திரிபால சிறிசேனவின் இந்த இணக்க முயற்சியால், நாடாளுமன்றம் பரபரப்பாக காணப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.