ஜூலை இறுதியிலேயே உள்நாட்டு விசாரணைப் பொறிமுறை – மங்கள சமரவீர தகவல்
சிறிலங்காவில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் பொறுப்புக்கூறல் விவகாரங்களைக் கையாள்வதற்கான உள்நாட்டுப் பொறிமுறை வரும் ஜூலை மாத பிற்பகுதியில் உருவாக்கப்படும் என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
“இந்த உள்நாட்டுப் பொறிமுறையை உருவாக்குவதற்கு வெளிவிவகார அமைச்சு நிறைய வேலைகளை செய்து வருகிறது.
இந்த உள்நாட்டுப் பொறிமுறைக்கான வரையறைகளை தீர்மானிக்க வேண்டியுள்ளது. இதற்கு மூன்று நான்கு தெரிவுகள் உள்ளன. இவற்றில் எமக்கு எது சிறந்த்து என்று நாம் முடிவு செய்வோம்.
வரும் செப்ரெம்பர் மாதம், ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 30வது கூட்டத் தொடரில், ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம் தமது விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளது.
எனவே, வரும் செப்ரெம்பரில், எப்படியாவது இந்த உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையை செயற்படுத்த அரசாங்கம் தயாராக இருக்க வேண்டும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.