மேலும்

ஜிஎஸ்பி பிளஸ் வரிச் சலுகைக்கு சிறிலங்கா மீண்டும் விண்ணப்பிக்கும்

ஐரோப்பிய ஒன்றியத்தின் திருத்தப்பட்ட புதிய ஜிஎஸ்பி விதிமுறைகளுக்கு இணங்க, சிறிலங்கா 2028 டிசம்பர் மாதத்திற்குள் ஜிஎஸ்பி பிளஸ் வரிச் சலுகைகளுக்கு மீண்டும் விண்ணப்பிக்கும் என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

ஜிஎஸ்பி பிளஸ் சலுகைகளைத் தொடர்ந்து பெறுவதற்காக, மனித உரிமைகள், தொழிலாளர் உரிமைகள், நல்லாட்சி மற்றும் சுற்றுச்சூழல் உடன்பாடுகளுக்கு இணங்குதல் தொடர்பான தற்போதுள்ள அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று, கொழும்பில் அண்மையில்  நடைபெற்ற வெளிநாட்டுத் தூதுவர்களுடனான சந்திப்பில் அவர் கூறியுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய ஜிஎஸ்பி விதிமுறைகள் அடுத்த ஆண்டு ஜனவரி 1 ஆம் நாள் முதல் நடைமுறைக்கு வரும்.

இதன்படி, தற்போது ஜிஎஸ்பி பிளஸ் சலுகையைப் பெறும் நாடுகள், சலுகையைத் தொடர்ந்து பெறுவதற்கு புதிய அமைப்பின் கீழ் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும்.

இந்த நாடுகள் புதிய விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க 2028 ஆம் ஆண்டின் இறுதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

புதிய அமைப்பின் கீழ், ஜிஎஸ்பி பிளஸ் சலுகைக்கு விண்ணப்பிக்கும் நாடுகள் கூடுதலாக ஐந்து அனைத்துலக உடன்பாடுகளுக்கு இணங்க வேண்டும் மற்றும் அவற்றைச் செயல்படுத்துவதற்கான ஒரு செயல் திட்டத்தையும் சமர்ப்பிக்க வேண்டும்.

புதிய உடன்பாடுகளில், மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் மீதான உடன்பாடும், தொழிலாளர் ஆய்வு மீதான அனைத்துலக தொழிலாளர் அமைப்பின் 81 ஆம் இலக்க உடன்பாடும் அடங்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *