ஈரானிய கப்பல் மூழ்கடிப்பு – சுற்றுச்சூழல் தாக்கம் குறித்து ஆராய உத்தரவு
சிறிலங்காவுக்கு அருகிலுள்ள கடற்பகுதியில், ஈரானியப் போர்க்கப்பலான ஐஆர்ஐஎஸ் டேனா மீது நடத்தப்பட்ட தாக்குதலால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்யுமாறு, கடற்றொழில், நீர்வாழ் மற்றும் கடல் வளங்கள் அமைச்சு, உத்தரவிட்டுள்ளது.
தேசிய நீர்வாழ் வளங்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு முகமைக்கும் (NARA) மற்றும் கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரசபைக்கும் (MEPA) இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
தேவையான மதிப்பீடுகளை மேற்கொண்டு, அமைச்சுக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு, இரு முகமைகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் ரத்ன கமகே, தெரிவித்தார்.
இந்த ஆய்வுகளின் அடிப்படையில் என்ன மேலதிக நடவடிக்கை தேவைப்படும் என்பது குறித்து, இந்த முகமைகள் அதிகாரிகளுக்குத் தெரிவிக்கும் என்றும் அவர் கூறினார்.
சிவில் சமூகக் குழுக்கள் எழுப்பிய கவலைகளைத் தொடர்ந்து, இந்தச் சம்பவத்தால் ஏற்படக்கூடிய சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுப்பெற்றுள்ள நிலையில், இந்தக் கருத்துக்கள் வெளியாகியுள்ளன.
