தீபச்செல்வனின் புத்தகங்கள் தடுப்பு- மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரிக்க தயார்
எழுத்தாளர் தீபச்செல்வனின் புத்தகங்கள் சுங்க அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டிருப்பது குறித்து விசாரணை நடத்த தயாராக இருப்பதாக சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நிமல் புஞ்சிஹேவ இதனைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, இதுவரை எந்த முறைப்பாடும் பெறப்படவில்லை.
என்றாலும், விரைவில் ஒரு முறைப்பாடு பதிவு செய்யப்படும் என நம்பகமான வட்டாரம் மூலம் ஆணைக்குழுவுக்குத் தகவல் கிடைத்துள்ளது.
முறைப்பாடு சமர்ப்பிக்கப்படும் வரை எந்தவொரு விசாரணையையும் ஆணைக்குழு நிறுத்தி வைத்துள்ளது.
முறைப்பாடு செய்யப்பட்டதும், இந்தத் தடுத்து வைப்பு மனித உரிமை மீறலாக அமைகிறதா என்பதை ஆணைக்குழு மதிப்பீடு செய்து, பாதுகாப்பு அமைச்சு உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குப் பரிந்துரைகளை வழங்கும்.
நாட்டின் சட்டத்தை மீறும் ஏதேனும் உள்ளடக்கம் இருந்தால், அதிகாரிகள் அதன் மீது நடவடிக்கை எடுக்கலாம்.
அப்படி எந்த உள்ளடக்கமும் இல்லை என்றால், அது அரசியலமைப்பின் 14(1)(அ) பிரிவின் கீழ் உள்ள கருத்துச் சுதந்திரம் மற்றும் 12(1) பிரிவின் கீழ் உள்ள சட்டத்தின் முன் சமத்துவம் ஆகியவற்றை மீறுவதாக அமையும்.
அத்தகைய சம்பவம் நடந்திருந்தால், நடைமுறையில் உள்ள சட்டத்தின்படி நாங்கள் நடவடிக்கை எடுக்கலாம். ஆனால், இதுவரை எந்த விசாரணையும் நடைபெறவில்லை,” என்றும் நிமல் புஞ்சிஹேவ மேலும் கூறினார்.
சென்னையிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட தீபச்செல்வனின் 360 நாவல் பிரதிகள் அடங்கிய பொதி மார்ச் மாத இறுதியில் சுங்க அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த சர்ச்சை எழுந்துள்ளது.
