மனிதப் புதைகுழிகள் குறித்து சர்வதேச விசாரணை கோரி கையெழுத்துப் போராட்டம்
செம்மணி மனிதப் புதைகுழிக்கு சர்வதேச விசாரணை கோரி வடக்கு, கிழக்கு மாகாணங்களில் எதிர்வரும் 29ஆம் திகதி கையெழுத்துப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டவுள்ளது.
தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து இன்று யாழ்ப்பாணத்தில் நடத்திய ஊடகச் சந்திப்பில் இதுகுறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பங்காளி கட்சிகளான ஈபிஆர்எல்எவ் தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன், புளொட் தலைவர் சித்தார்த்தன், ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன், சமத்துவ கட்சியின் பொதுச் செயலாளர் முருகேசு சந்திரகுமார், ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் வேந்தன் மற்றும், தமிழ் அரசு கட்சியின் பொதுச் செயயலாளர் எம்.ஏ.சுமந்திரன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் நடத்திய ஊடக சந்திப்பின் போதே இதுகுறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறிலங்காவில் பல்வேறு இடங்களில் மனிதப் புதைகுழிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
அவற்றில் பெரும்பாலான புதைகுழிகள் வடக்கு, கிழக்கில் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றுக்கு என்ன நடந்தது என யாருக்கும் தெரியாது.
தற்போது அகழ்வு பணி மேற்கொள்ளப்படும் செம்மணி மனிதப் புதைகுழிகளில் 140க்கும் மேற்பட்ட எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன.
அவற்றில் 90 வீதமானவை ஆடைகள் அற்ற நிலையிலையே மீட்கப்பட்டுள்ளன. அத்துடன் குழந்தைகளின் எலும்புக்கூடுகளும் மீட்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் எனக் கோரியும் சர்வதேச நிபுணர்களின் கண்காணிப்பில் அகழ்வு பணிகள் முன்னெக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியும் இந்த கையெழுத்துப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
தமிழ்த் தேசிய பரப்பில் பயணிக்கும் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து இந்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளன.

