சுஸ்மாவுக்கு இராப்போசன விருந்தளித்தார் மங்கள – சம்பந்தன், சந்திரிகாவும் பங்கேற்பு
இரண்டுநாள் பயணமாக சிறிலங்கா வந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜுக்கு,சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நேற்றிரவு இராப்போசன விருந்தளித்தார்.
இந்த இராப்போசன விருந்தில், சிறிலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜுடன், இந்திய வெளிவிவகாரச் செயலர் எஸ்.ஜெய்சங்கர், சிறிலங்காவுக்கான இந்தியத் தூதுவர் வை.கே.சின்ஹா, இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் சையத் அக்பருதீன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் உரையாற்றிய இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ்,
“இந்திய வெளிவிவகார அமைச்சராக முதல்முறையாக சிறிலங்காவுக்கு வந்துள்ளேன்.
ஆனால் சிறிலங்கா எனக்கு புதியது அல்ல. நான் இங்கு பலமுறை வந்துள்ளேன்.
கடந்த 2012 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது, நாடாளுமன்றக் குழுவுக்குத் தலைமை தாங்கி இந்த அழகிய தீவுக்கு வந்திருக்கிறேன்.
முதலில் நான் சிறிலங்கா அரசாங்கத்துக்கும், எனக்கும் எனது குழுவினதுக்கும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் அளித்த விருந்துக்காகவும் எனது உண்மையான நன்றியைத் தெரிவிக்க விரும்புகிறேன்.
இன்று ஹோலி பண்டிகை. ஹோலி ஒரு நிறங்களின் விழா என்பதை அறிவீர்கள்.
இந்தியாவில் கொண்டாடப்படும் இந்த விழாவைக் கைவிட்டு விட்டு நாங்கள் வந்திருக்கிறோம்.
இந்த பண்டிகை வசந்த காலத்தின் வருகையின் குறியீடாகும். மகிழ்ச்சியின் முன்னறிவிப்பாகும்.
எமது இருதரப்பு உறவுகளின் தற்போதைய நிலையின் பிரதிபலிப்பாக இது இருக்கும் என நம்புகிறேன்.
ஹோலி இந்தியாவின் பன்முகத்தன்மை மற்றும் பல கலாச்சார பாரம்பரியத்தை பிரதிபலிக்கிறது.
அண்மையில் சிறிலங்காவிலும் இந்தியாவிலும், நடந்த தேர்தல்களில் மக்கள் மாற்றத்துக்காக வாக்களித்தது வரலாற்றில் குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இது இருதரப்பு உறவுகளில் புதிய ஊக்கத்தைக் கொண்டு வந்துள்ளது.
சிறிலங்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுகள், வரலாறு, புவியியல், கலாசார ரீதியாக பழின்னிப் பிணைந்துள்ளன.
இந்த உறவுகள் அயல்நாடு, நண்பர்கள் என்பதைக் கடந்து முன்னேறிச் செல்ல வேண்டும்” என்று தெரிவித்தார்.