மோடி வருகையால் சிறிலங்கா நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அடுத்தவாரம் உரையாற்றவுள்ளதால், சிறிலங்கா நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்படவுள்ளதாக, பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி அறிவித்துள்ளார்.
இரண்டு நாள் அதிகாரபூர்வ பயணமாக சிறிலங்கா வரவுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, வரும் 13ம் நாள் பிற்பகல் 3.15 மணியளவில் சிறிலங்கா நாடாளுமன்றத்தில் உரையாற்றவுள்ளார்.
இதனை முன்னிட்டு மேற்கொள்ளப்படவுள்ள பாதுகாப்பு ஒழுங்குகள் தொடர்பாக, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி விளக்கமளித்துள்ளார்.
இந்தியப் பிரதமர் உரையாற்றவுள்ள வரும் 13ம் நாள், பொதுமக்கள் அமர்வுகளைப் பார்வையிடும் அரங்கு மூடப்பட்டிருக்கும்.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் அறைகள் உள்ளிட்ட எல்லா அறைகளும், பெட்டகங்களும், பாதுகாப்பு அதிகாரிகளால் சோதனையிடப்படும்.
மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையாள அழைப்பாளர்கள் மட்டும், பார்வையாளர் அரங்கிற்கு அனுமதிக்கப்படுவர்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது வாழ்க்கைத் துணைவர், அல்லது துணைவியை அழைத்து வரமுடியும்.” என்று பிரதி சபாநாயகர் அறிவித்துள்ளார்.