அமெரிக்க – சிறிலங்கா மரைன் படையினரின் கூட்டுப் பயிற்சி நிறைவு
அமெரிக்க கடற்படையின் பசுபிக் மரைன் படைப்பிரிவும், சிறிலங்கா கடற்படையுடன் இணைந்து, இருதரப்பு மருத்துவ பரிமாற்ற பயிற்சிகளை மேற்கொண்டுள்ளன.
சிறிலங்கா கடற்படையின் விதுர தளத்தில் உள்ள மரைன் பயிற்சி நிலையத்தில் இந்த கூட்டுப் பயிற்சி இடம்பெற்றது.
கடந்த 23ஆம் நாள் ஆரம்பமாகிய இந்த கூட்டுப் பயிற்சி, 27ஆம் நாள், முடிவடைந்தது.
அமெரிக்காவின் மரைன் படையின் மருத்துவர் ஒருவர் உள்ளிட்ட எட்டு அதிகாரிகளைக் கொண்ட குழுவும், சிறிலங்கா கடற்படையின் 40 மரைன் படையினரும் இந்தப் பயிற்சியில் பங்கேற்றனர்.
போரில் பல்வேறு சூழ்நிலைகளில், முக்கியத்துவம் வாய்ந்த மருத்துவ உதவிகள் தொடர்பாகவும், தமது அனுபவங்கள் மற்றும் ஆற்றல்கள் குறித்தும், அமெரிக்க குழுவினர் சிறிலங்கா மரைன் படையினருக்கு விளக்கமளித்தனர்.
அதேவேளை, சிறிலங்காவில் உள்ள பாம்புகள் குறித்தும், விசமுள்ள, விசமில்லா பாம்புகளை கையாளுவது மற்றும் பாம்புக்கடிக்கான முதலுதவி குறித்தும், சிறிலங்கா கடற்படையினர், அமெரிக்க அதிகாரிகளுக்கு விளக்கியுள்ளனர்.