உயர்பாதுகாப்பு வலய மீள்குடியமர்வு பிரச்சினையை தீர்க்க சிறப்புக் குழு – பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்
உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள, சிறிலங்கா படையினர் நிலைகொண்டுள்ள காணிகளில், இருந்து இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியேற்றுவது தொடர்பாக குழுவொன்றை அமைத்து, உரிய தீர்வு காணப்படும் என்று சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன தெரிவித்தார்.
வடக்கில் பாதுகாப்பு நிலைமைகளை நேற்றும் இன்றும் ஆராய்ந்த அவர், வவுனியா படைத் தலைமையகத்தில், இன்று படையினரைச் சந்தித்த பின்னர், செய்தியாளர்களிடம் பேசினார்.
உயர் பாதுகாப்பு வலயத்தில் இருந்து இடம்பெயர்ந்துள்ள மக்களின் மீள்குடியேற்றம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர்,
“இடம்யெயர்ந்த மக்களை மீளக்குடியேற்றுவது தொடர்பாக சிறிலங்கா அதிபரும், பிரதமரும் அக்கறை கொண்டிருக்கின்றனர்.
உயர் பாதுகாப்பு வலயத்தில் இருந்து இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியேற்றுவது தொடர்பாக கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டு அந்த மக்களின் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு காணப்படும்.
இடம்பெயர்ந்துள்ள மக்களை மீள்குடியேற்ற வேண்டும் என்பதற்காக தமிழ் மக்களினதும் ஏனைய மக்களினதும் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டுள்ள இராணுவ முகாம்களை அகற்ற வேண்டியதில்லை.
அதேபோன்று தற்போது வடக்கு, கிழக்குப் பிரதேசங்களில் நிலைகொண்டுள்ள படையணிகளைக் குறைக்க வேண்டிய அவசியமும் இல்லை.
இதுதொடர்பாக வடக்கில் உள்ள மக்களுடனும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடனும் ஏனைய தரப்பினருடனும் கலந்து பேசி உரிய தீர்வு காணப்படும்” என்று தெரிவித்தார்.
முன்னதாக, நேற்று யாழ்ப்பாணத்திலும், இன்று கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களிலும், பாதுகாப்பு நிலைமைகளை ஆராய்ந்த ருவான் விஜேவர்த்த்ன நாளை திருகோணமலையில் பாதுகாப்பு நிலைமைகளை மதிப்பீடு செய்யவுள்ளார்.